பவானி: தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சிங்கம்பேட்டை விவசாயிகளுக்கு நேற்று கடனுதவிகளை வழங்கிய அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழக அரசு விவசாயத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான கடனுதவிகளை தடையின்றி வழங்கி வருகிறது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், சாகுபடிப் பணிகளுக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டாசுகள் வெடிக்கலாம். கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகளே நீதிமன்றத் தீர்ப்பின்படி பின்பற்றப்படும். மாசில்லா தீபாவளி கொண்டாடுவது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்தும் சோதனை வழக்கமானது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.