சென்னை: அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து பதிவு செய்ததற்கான ஆதார சான்றிதழை ஆணையம் நேற்று வழங்கியது. கட்சிக்கு தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரன், பொருளாளராக ஷோபா ஆகியோரின் பெயர் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.
அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை.இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
* விண்ணப்பித்தது நான்தான்: எஸ்ஏசி ஒப்புதல்
தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெயர் பதிவு செய்தது தொடர்பாக விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும்போது, ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது எனது முயற்சி. இது விஜய்யின் அரசியல் கட்சி கிடையாது. விஜய் வாக்கு அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி கருத்து சொல்ல முடியாது’ என்றார்.