சென்னை: தமிழகத்தில் 36 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளது. இதில், 33,600 விற்பனையாளர்களும், 5,500 எடையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2015 நவம்பர் 9ம் தேதி புதிய ஊதியம் நிர்ணயக்கப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த ஊதிய நடைமுறை முடிவுக்கு வர உள்ள நிலையில் தற்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, மாநில தலைமை கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு புதிய ஊதிய பரிந்துரைகள் குறித்த அறிக்கையை 3 மாதத்துக்குள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நியாய விலை கடை பணியாளர்களுக்கான ஊதிய மாற்றத்தினை பரிசீலித்து பரிந்துரை செய்வது தொடர்பான குழுவின் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் 13 சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில், நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு தொடர்பான குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வருகை புரிந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.