×

திருவாடானையில் ஊரணி கரை காணாமல் போச்சு: ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

திருவாடானை: திருவாடானை சந்தைப்பேட்டை ஊரணி கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. திருவாடானை மைய பகுதியில் அமைந்துள்ளது சந்தைப்பேட்டை என்ற பெரிய ஊரணி. சுமார் 4 ஏக்கர் பரப்பளவை கொண்ட இவ்வூரணி தண்ணீரை பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். மேலும் இவ்வூரணி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.

காலப்போக்கில் சுகாதார கேடு ஏற்பட்டு, குடிநீர் ஊரணியாக இருந்தது, குளிக்கும் ஊரணியாக மாறியது. தொடர்ந்து ஊரணியின் மேற்கு, தெற்கு கரை பகுதியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி விரிவாக்கம் செய்து விட்டனர். மேலும் ஏராளமான கழிப்பறைகளையும் கட்டி விட்டனர். இதனால் இவ்வூரணிக்கு கரையே இல்லாமல் போய் விட்டது. எனவே இந்த ஊரணி ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், தூர்வாரி மீண்டும் குடிநீர் ஆதார பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மிகவும் பழமைவாய்ந்த சந்தைப்பேட்டை ஊரணி உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து வரும் மக்கள், கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காலப்போக்கில் அதிகாரிகள் ஆதரவோடு, இவ்வூரணி கரையில் பலர் பட்டா வாங்கி விட்டனர். மேலும் ஆக்கிரமித்து குளியலறை, கழிப்பறையும் கட்டி விட்டனர். இதனை அகற்ற கோரி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அனுப்பினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு வழக்குகளில் வலியுறுத்தி வருகிறது. எனினும் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூரணியின் ஆக்கிரமிப்பு மட்டும் யார் கண்ணிலும் படவில்லையா என தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சந்தைப்பேட்டை ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற குடிநீர் ஆதாரத்திற்கு வழிவகுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : bank ,Urani ,Thiruvananthapuram ,removal , Thiruvananthapuram
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...