பழநி: பழநியில் நாயை விழுங்க முயன்ற மலைப்பாம்பை தீயணைப்புப்படையினர் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி ரோப்கார் நிலையத்தின் மேற்கு பகுதியில் நேற்று ஏராளமான நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. கோயில் செக்யூரிட்டிகள் அங்கு சென்று பார்த்தபோது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நாயை சுருட்டி, விழுங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து பழநி தீயணைப்புப்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்புப்படையினர் மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருந்த நாயை மீட்டனர். ஆனால், நாய் உடல் நசுங்கியதால் உயிரிழந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பிடிக்கப்பட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.a