×

இந்து கல்லூரி அதிகாரி மர்மச்சாவு: ஊழியர்கள் அதிர்ச்சி; பணிச்சுமையா? விசாரணை

ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் உள்ள கிணற்றில் வேலைவாய்ப்பு அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (46). இவர் ஆவடி அடுத்த பட்டாபிராம், இந்து கல்லூரியில் வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை சங்கர் சக ஊழியர்களுடன் கல்லூரி மைதானத்தில் வாலிபால் விளையாடி உள்ளார். அப்போது, அவருக்கு கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் மைதானத்திலிருந்து விளையாட்டை பாதியில் விட்டு விட்டுச் சென்றுள்ளார். பின்னர், வெகுநேரமாகியும் சங்கர் மீண்டும் மைதானத்திற்கு வரவில்லை. இதனையடுத்து, இரவு சக ஊழியர்கள் அவரை தேடி உள்ளனர்.

அப்போது, அங்கு உள்ள கிணற்றுக்கு அருகில் சங்கரின் ஷு, வாட்ச், பர்ஸ், கர்சீப் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சக ஊழியர்கள் கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது, அங்கு சங்கர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்த  ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மீட்டனர். பின்னர், பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், முதல்வர் அழைத்ததால் அதிகாரி சங்கர் அலுவகத்திற்கு சென்று உள்ளார். அதன் பிறகு, அவர் விளையாட வராமல் கிணற்றில் சடலமாக கிடந்து உள்ளார். இதனால், அவர் இறப்புக்கு அலுவலகத்தில் உள்ள பணிச்சுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான், அதிகாரி சங்கரின் இறப்பு குறித்து முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : Marmachavu ,Hindu College ,Investigation , Hindu College Officer Marmachavu: Staff shocked; Workload? Investigation
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...