காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த நேற்று முன்தினம் கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், முதல்கால யாசசாலை பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து, நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தனம், 3ம்கால யாகசாலை பூஜை, தீபாராதனை, யாகசாலை பிரவேசம், மகா சங்கல்பம், கலச புறப்பாடு ந ஆகியவை சிறப்பாக நடந்தன. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகமும் தொடர்ந்து கோபுர கலசத்துக்கு அபிஷேகமும் நடத்தப்பட்டது. இதில், கருவேப்பம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.