செய்யூர்: செய்யூர் அருகே பவுஞ்சூர் அடுத்த சேவூர் பாலாற்று கரையோரம் நேற்று அதிகலையில், மர்மநபர்கள் சிலர் லாரியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் மணல் ஏற்றி கொண்டிருந்த மர்மநபர்கள், போலீசாரை கண்டதும் தப்பிவிட்டனர். இதையடுத்து போலீசார், மணலுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், லாரியின் ஆவணங்களை சோதனையிட்டபோது, அதன் உரிமையாளர் கடுகப்பட்டு கிராமத்தை சேர்ந்த சேகர் (45) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.