திருவனந்தபுரம்: பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை அமலாக்கத்துறை சில நாட்களுக்்கு முன் கைது செய்தது. இவரை அமலாக்கத்துறை முதலில் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. தற்போது மீண்டும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திருவனந்தபுரம் மருதன்குழியில் உள்ள பினீஷின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் பினீஷ் கொடியேரிக்கு சொந்தமான மற்றும் அவர் பங்குதாரராக உள்ள திருவனந்தபுரத்தில் ‘கார் பேலஸ்’ உட்பட 5 இடங்களிலும் கண்ணூரில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்தது. கண்ணூர் மாவட்டம் தலசேரியில் ஒரு வீட்டில் பின்புறத்தில் இருந்து சாக்கில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் மகன் வீட்டில் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.