சென்னை: அறநிலையத்துறை இடங்களை கோயில் பயன்பாட்டிற்கு தவிர மற்றவற்றிற்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த இரு கோயில்கள் உள்ளிட்ட கோயில் நிலங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், வழக்கு தொடர்புடைய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது. நீலாங்கரை கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீன் வளத்துறை பயன்படுத்துவது தொடர்பாக அறநிலையத்துறையும், மீன்வளத்துறையும் ஒப்பந்தம் ெசய்து உரிய வாடகையை நிர்ணயிக்க வேண்டும்.
அதில் உடன்பாடு இல்லையென்றால் நிலத்தை கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் நிலம் தொடர்பாக ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும். காலி இடங்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களின் நிலங்களை கோயில் விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி, அதுகுறித்த அறிக்கையை ஆணையரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 6 மாதத்திற்கு தள்ளிவைத்தார்.