×

மகன்கள் அடித்து துன்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் 91 வயது மூதாட்டி தஞ்சம்

பொன்னை: மகன்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி 91 வயது மூதாட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பூர்ணம்(91). இவர் நேற்று காலை பொன்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த எனக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்து விட்டார். இதனால், எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.

அவ்வாறு விவசாயம் செய்து வரும் நிலத்தை எனது 4 மகன்கள் அவர்களின் பெயர்களுக்கு எழுதி கொடுக்க கூறி தினமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து பல முறை நான் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது கொடுக்கும் இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags : police station ,sons , Sons, property, harassment, grandmother, complaint
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...