தியேட்டரில் படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணம் செலுத்துவது தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தியேட்டர் அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தியேட்டரில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப விபிஎப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்ைத தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்தனர். இனிமேல் தியேட்டர் அதிபர்கள்தான் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்து இருந்தார். கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் புதிய படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அவர் கூறினார். இது குறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: விபிஎப் கட்டணத்தை வசூலிக்கும் டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து எங்களால் சலுகைகள் பெற்றுத் தர முடியும்.
அதன்படி, இதற்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் சம்பந்தமாக தயாரிப்பாளர்களுடன் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் பிறகே தீபாவளிக்கு புதிய படங்களை திரையிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்கும் திட்டமில்லை. ஆனால் கட்டணம் உயர்த்தவும் போவதில்லை. பழைய கட்டணமே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். 8 சதவீத கேளிக்கை வரியை நீக்க கோரி, தியேட்டர் அதிபர் அபிராமி ராமநாதன் முதல்வரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தீபாவளியையொட்டி தியேட்டரில் கூடுதல் காட்சிகளுக்கு அரசு அனுமதி தரும். இவ்வாறு அவர் கூறினார்.