திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷேக் இம்ரான்(20). திருவள்ளூர் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்ரம்(20). மணவாளநகர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்(20). இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் புல்லரம்பாக்கம், காந்திநகர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சேக் இம்ரானும், பிரவீன்குமாரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் பிரவீன்குமார் மட்டும் செடிகளை பிடித்துக் கொண்டு தப்பி மேலே வந்து விட்டார்.
ஆனால் சேக் இம்ரான் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணா கால்வாயில் சேக் இம்ரானை நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஈக்காடு அருகே கால்வாயில் ஒரு பள்ளத்தில் நேற்று மதியம் ஷேக் இம்ரான் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.