சென்னை: கோயில்களில் அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்து 121கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், கரோனா வைரஸ்பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
பின்னர், தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருவாய் உள்ள சிறிய கோயில்கள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழகம்முழுவதும் அனைத்து கோயில்களும் செப்.1 முதல் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயில்களில் பிரதான அம்பாள் மற்றும் சுவாமி அமைந்துள்ள சந்நிதிகளில் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயில்களில் உள்ள விநாயகர், முருகன் உள்ளிட்ட பிற சந்நிதிகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், பிரதான அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கோயில்களில் இருந்து உடனடியாக வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், கோயில்களில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செயல் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: கோயில்களில் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்வதற்கு பிரதான அம்பாள் மற்றும் சுவாமி அமைந்துள்ள சந்நிதிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இனி,சுற்றுப் பிரகார சந்நிதிகளுக்கு பக்தர்களை அனுமதிக்கவும், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டிநடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.