நெல்லை: மேலப்பாளையம் அமுதா நகரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலப்பாளையம் சந்தை எதிரே அமுதா நகர், அமுதா பீட் நகர், டீச்சர்ஸ் காலனி ஆகியவற்றில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போ–்ன் டவர் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று டவர் அமைய உள்ள இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
டவர் அமைப்பதை கண்டித்து இந்திய தேசிய லீக் பகுதி தலைவர் அப்துல்காதர், செயலாளர் அப்துல்வாகித், துணைச் செயலாளர் அலி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலப்பாளையம் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்த கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களை காவல்நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.