வியன்னா: வியன்னாவில் உள்ள தேவாலயம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னா உள்ள தேவாலயம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் பலியானதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கூறுகையில், ‘இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம். துப்பாக்கிச் சூடு பல நபர்களால் நடத்தப்பட்டது. சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நகரின் மையத்தில் தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திறந்தவெளி மற்றும் பொது போக்குவரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும்’என்றார். ஆனால், தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் தப்பி ஓடியதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வியன்னாவில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ஒஸ்கர் டாய்ச் கூறுகையில்,‘நகரத்தின் பிரதான சர்ச்சில் அமைந்துள்ள தெருவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆனால் வழிபாட்டு தலம் மீது குறிவைக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் சர்ச் மூடப்பட்டது’என்றார்.