காரைக்கால்: வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் பல இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்பட்டது. காரைக்காலில் இன்று அதிகாலை தொடங்கிய பனிப்பொழிவு காலை 9 மணி வரை நீடித்தது. எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
ஒரு சில இடங்களில் மழை சாரல் போல பனி பெய்து சாலைகளை நனைத்துள்ளது. இதனால் நடைப்பயிற்சி செல்பவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருந்துள்ளது. மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குடன் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல பனிப்பொழிவு நவம்பர் மாதத்திலேயே இருந்ததால், அந்த ஆண்டு பருவமழை குறைந்த அளவு காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டும் மழை பொழிவு குறைந்த அளவு இருக்குமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.