சென்னை: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூர் ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.20 முதல் 15.4.21 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையில் இருந்து 1137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இதனால் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.