ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே வாணியன் சத்திரம் ஊராட்சியில் எம்ஜிஆர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாணியன் சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், இந்த ஊராட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மின் கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்களின் சிமெண்ட் பூச்சுக்கள் சேதமடைந்து அதன் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த கம்பங்கள் எப்பொழுது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
இந்த மின் கம்பங்களை மாற்ற பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “எங்கள் ஊராட்சியில் பல இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்து அதன் கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த கம்பங்களை மாற்ற வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளோம். கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை கம்பங்களை மாற்றவில்லை. எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கம்பங்களை மாற்றாவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்” என கூறினர்.