×

நாகர்கோவிலில் கணவர் இறந்த சோகத்தில் 2 குழந்தைகளை கொன்று உடுமலை பெண் தற்கொலை: உருக்கமான கடிதம், வீடியோ சிக்கியது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கணவர் இறந்த சோகம் தாங்கால் தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் கீழநெசவாளர்காலனி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் ரஞ்சித்குமார் (33). மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மனைவி ராசி (28). திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர். இவர்களுக்கு  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அக்‌ஷயா (5), அனுஷயா (3) என்ற இரண்டு மகள்கள் உண்டு.

ரஞ்சித்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இறந்துவிட்டார். அதன் பிறகு மாமானார் ராமதாஸ், மாமியார் சந்திரா (68) ஆகியோருடன் ராசி தனது குழுந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் இறந்தது முதல் ராசி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். குழந்தைகளும் அப்பாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் தவித்து வந்துள்ளன. இதுவும் ராசிக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி ரஞ்சித்குமாரின் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி வந்தது. அப்போது ராசி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.

உறவினர்கள் வந்து அவருக்கு ஆறுதல் கூறி சென்றனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள கழிவறையில் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு சந்திரா அங்கு சென்றபோது கழிவறையில் ராசி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தன. அவர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர் என்று கூறினர்.

பின்னர் குழந்தைகளின் உடலையும், ராசியின் உடலையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி வேணுகோபால் சம்பவ இடம் வந்தார். நேசமணிநகர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், படுக்கை அறையில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கழிவறைக்கு சென்று தீ குளித்து தற்கொலை செய்துள்ளார். சமீபத்தில் தான் வீட்டிற்கு பெயின்ட் அடித்துள்ளனர். இதற்காக வாங்கிய தின்னர் வீட்டில் வைத்திருந்தனர். அதை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து உள்ளது தெரியவந்தது.

இதனால் உடல் கருகியதோடு மூச்சு திணறல் ஏற்பட்டு உடனடியாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  விசாரணையில் ராசி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் கிடைத்தது. இதேபோல் 4 வீடியோவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தீ குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராசி எழுதிய உருக்கமான கடிதம்
வழக்கமாக ராசிக்கு செல்போனில் ஸ்டேட்டஸ் போடும் பழக்கம் கிடையாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று அவர் தனது செல்போனில் 2 குழந்தைகளின் படங்களை ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார். ஆனால் இறப்பதற்கு முன்பு செல்போனில் தனது நிலையை விளக்கி வீடியோ பதிவு செய்துள்ளார். அதோடு ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். கடிதத்தில் எழுதி உள்ளதாவது: ராசி எழுதுவது, செழியன் அண்ணா, சரிதா அண்ணி, செந்தில் அண்ணா, ரேகா அவர்களுக்கு, நானும் பிள்ளைகளும் தூக்க மாத்திரை சாப்பிட்டோம். தயவு செய்து என்னை மன்னிச்சுருங்க.

நான் எனக்கு ஒரு வருடம் நேரம் கொடுத்து அதுக்கு பிறகு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்.  உங்க யாராலையும் இதை தாங்கிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனாலும் என்னால இப்படி ஒரு வாழ்க்கைய வாழ முடியாது. பிளீஸ் சாரி, என்னையும், என் பிள்ளைங்களையும் என் புருஷன் கிட்ட நல்லபடியா அனுப்பி வையுங்க. பிளீஸ் பிளீஸ் நான் என் போன்ல 4 வீடியோ போட்டு இருக்கேன். அதை பாருங்க. இவ்வாறு கடிதத்தில் எழுதி உள்ளார்.

Tags : Udumalai ,suicide ,tragedy ,children ,Nagercoil ,death , Udumalai woman commits suicide by killing 2 children in Nagercoil tragedy over husband's death
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்