அம்பத்தூர்: அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் வீடு, கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து, பொதுமக்கள் சார்பில் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் பரணிதரன், எஸ்.ஐ முத்துராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், கொள்ளை நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அம்பத்தூர் அடுத்த பாடிபுதுநகர் கலைவாணர் காலனியை சேர்ந்த அருண்(23), அவரது நண்பர் சிவா(22) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், அம்பத்தூர் பகுதிகளில் கடை, வீடுகளை உடைத்து தங்க நகைகள், செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 7 சவரன் தங்க நகைகள், இரண்டு விலை உயர்ந்த செல்போன் மற்றும் கொள்ளை செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.