சென்னை: அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க கடந்த மாதம் 13ம் தேதி தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றார். அப்போது, அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் துரைக்கண்ணு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, கடந்த 13ம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றிரவு 11.15 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, அமைச்சர் துரைக்கண்ணு மறைவையடுத்து அவரது வேளாண் துறையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கூடுதலாக அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.