×

அண்டா, குண்டா திருடிவிட்டு போதையில் தூங்கிய ஆசாமிகள்: வைரலாகும் வீடியோ

காலாப்பட்டு: அண்டா, குண்டாவை திருடிவிட்டு போதையில் தூங்கிய ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதி மாத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு 2 ஆசாமிகள் குடிபோதையில் குப்பை பொறுக்கி உள்ளனர். அப்போது சில வீடுகளின் பின்புறம் அண்டா, குண்டா, அடுப்பு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்கள் கழுவி காய வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பழைய பொருட்கள் போல் சாக்குப்பையில் போட்டுக் கொண்டு வந்தனர்.

பின்னர், போதை அதிகமாகி காலாப்பட்டு செல்லும் சாலையில் நடக்க முடியாமல், சாலையோரமாக சாக்குப்பையை தலையில் வைத்து படுத்து தூங்கினர். அவ்வழியாக சென்று சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், சந்தேகத்தின் பேரில் தூங்கிய அந்த ஆசாமிகளை எழுப்பி விசாரித்தார். ஆனால், அவர்கள் குடிபோதையில் உளறியது அவருக்கு புரியவில்லை. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்து சாக்குப்பையை பிரித்து பார்த்துள்ளார். அதில் அண்டா, குண்டா, அடுப்பு, தட்டு, டம்பர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்களிடம் துருவி துருவி விசாரித்தபோது, போதை மயக்கத்தில் குப்பையில் கிடந்தது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் பிரகாஷ் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தி வருந்ததும், குடிபோதையில் பொருட்களை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குடிபோதையில் பொருட்களை திருடிவிட்டு அதே பகுதியில் தூங்கிய ஆசாமிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Anda ,Kunda ,Assamese , Anda, Kunda stole and intoxicated Assamese: Video goes viral
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...