போபால்: மத்தியபிரதேச இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பாஜ-வில் சேர்ந்தால் ரூ.50 கோடி, அமைச்சர் பதவி? வாங்கித் தருவதாக சிந்தியா தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதனால், கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 3ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓயும் நிலையில், மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்நாத் முதல்வராக இருந்த போது மாநில அமைச்சராக இருந்த எம்எல்ஏ உமாங் சிங்கர் தனது தேர்தல் பிரசாரத்தில் சிந்தியா மீது பகீர் குற்றச்சாட்டை கூறினார். அவர், ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர ரூ.50 கோடியும், அமைச்சர் பதவியும் வாங்கித் தருவதாக சிந்தியா கூறினார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைதான் எனக்கு முக்கியமானது என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்கு பதவி முக்கியமல்ல என்றேன். அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தால் எதிர்காலம் இல்லை என்று என்னிடம் கூறினார். அதனால், உங்களுக்காக 50 கோடி ரூபாய் ரொக்கமும், அமைச்சர் பதவியும் வாங்கித் தர நான் பாஜகவுடன் பேசியுள்ளேன் என்று ெதரிவித்தார். ஆனால், நான் காங்கிரஸ் கட்சியிலே தொடர்ந்து நீடிப்பேன் என்று கூறிவிட்டேன்’ என்று பேசினார்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் எம்எல்ஏ உமாங் சிங்கரின் பேச்சு மாநில அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பத்னாவரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், ‘சிந்தியா மீது உமாங் சிங்கர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர், தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். உமாங் சிங்கர் உண்மை கூறுகிறாரா? அல்லது பொய்யைக் கூறுகிறாரா? என்பதை சிந்தியா சொல்ல வேண்டும். அதே நேரத்தில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.