×

வெளியூர் சென்ற நேரத்தில் போகியத்துக்கு விட்ட வீட்டு வாசலை சுவர் வைத்து அடைத்த உரிமையாளர்: குழந்தைகளுடன் தெருவில் தவித்த பெண்கள்

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, போகியத்துக்கு விட்ட வீட்டை, சுவர் வைத்து கதவை  அடைத்ததால், குழந்தைகளுடன் தாய், மகள் தெருவில் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்  மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்தவர் கவிதா(45). இவர்  இங்குள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டிற்கு, 1 லட்சம் முன்பணம் கொடுத்து,  கடந்த 6 ஆண்டுகளாக போகியத்திற்கு குடியிருந்து வருகிறார். இவரது மகள்  சிவரஞ்சனி, திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலத்தில் கணவருடன் விசைத்தறி  தொழில் செய்து வருகிறார். கவிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,  கடந்த 6 மாதங்களாக, சிவரஞ்சனி இரு  குழந்தைகளுடன், தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 25ம்தேதி, கவிதா ராமேஸ்வரத்திற்கு  ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் தனியாக இருந்த சிவரஞ்சனி,  குமரமங்கலம் சென்று விட்டார். இந்நிலையில் 28ம்தேதி, கவிதா சுற்றுப்பயணத்தை  முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவை அடைத்து, சுவர்  எழுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும், வாசலில் கருங்கற்கள் கொட்டி,  வீட்டின் உள்ளே செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல்  அறிந்த சிவரஞ்சனி, உடனடியாக தனது குழந்தைகளுடன் ஓடப்பள்ளிக்கு வந்தார். போகியத்திற்கு  வீட்டை ஒப்படைத்த நாகலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம், கந்து  வட்டிக்கு 1.50 லட்சம் வாங்கியதாகவும், அதற்கு பல லட்சம் ரூபாய்  வட்டியானதால், கடனை திரும்ப செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்  வீட்டை கிரயம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், வீட்டை  வாங்கியவர் கவிதாவை வெளியேற்றுவதற்காக, வாசலில் கற்களை கொட்டியும், கதவின் முன்பு  சுவர் எழுப்பியுள்ளதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.  இதையடுத்து, தனது வீட்டில் உள்ள பொருட்களையும், போகியத்திற்கு  கொடுத்த பணத்தையும் திருப்பி தரும்படி,  கவிதா மற்றும் சிவரஞ்சனி, வீட்டின் புதிய உரிமையாளரிடம்  கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை தர மறுத்த அவர்,  கவிதாவையும் சிவரஞ்சனியையும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால், மாற்றுத்துணி கூட இல்லாத  நிலையில், கடந்த 2 நாட்களாக குழந்தைகளுடன் தாயும், மகளும் வீதியிலேயே  தங்கியிருந்தனர்.

இவர்களுக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், உணவு கொடுத்து  வந்தனர். இந்த விவகாரம் குறித்து சிவரஞ்சனி, கலெக்டரை  செல்போனில் தொடர்பு கொண்டு புகார் ெதரிவித்தார். அவர் எஸ்பி மூலம் உரிய  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, இருதரப்பினரையும் அழைத்து  பேசினார். பின்னர் வீட்டு வாசலில் கிடந்த கற்கள்  அகற்றப்பட்டது. கதவின் முன்பிருந்த தற்காலிக சுவரும்  அப்புறப்படுத்தப்பட்டது. இரு நாட்களாக வீதியில் அனாதையாக நின்ற தாயும்,  மகளும் வீட்டிற்குள் சென்ற மகிழ்ச்சியில், கலெக்டர், எஸ்பி மற்றும்  இன்ஸ்பெக்டருக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.

Tags : owner ,house ,street ,Pokiyat ,children ,Women , pallipalaiyam
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை