×

திருமருகல் அருகே ரேஷன்கடை அரிசியில் புழுக்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி

நாகை: திருமருகல் அருகே ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியில் புழுக்கள் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் கிராம மக்கள் உள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் புழுக்கள் இருப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கட்டுமாவடி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் கட்டுமாவடி, புறாக்கிராமம், தேவங்குடி, தண்டாலம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருமருகல் அருகே கட்டுமாவடி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ரேஷன் அரிசியில் புழுக்கள் இருந்ததால் அதை வாங்கிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். புழுக்கள் நெளியும் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்களிடம் முறையிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். மூட்டையில் வரும் அரிசியை உங்கள் கண்முன்னேயே தான் பிரித்து கொடுக்கப்படுகிறது. எனவே கொடுப்பதை வாங்கி செல்லவேண்டும் என்று அலட்சியமாக பதில் சொல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Thirumurugal , Thirumurugal, ration shop, rice, worms
× RELATED குழாய்களில் அடிக்கடி உடைப்பு தினமும்...