×

சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நிலை என்ன?

* அரசு அறிவித்தும் செயல்படுத்தாத அறநிலையத்துறை
* கொரோனா ஊரடங்கை காரணம் காட்டும் அதிகாரிகள்

சென்னை:  சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த 4 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக கொரோனா ஊரடங்கை அதிகாரிகள் காரணம் காட்டி வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,120 கோயில்கள் உள்ளது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற கோயில்கள் அடக்கம்.   கடந்த 2019-20ல் ₹10 கோடி செலவில் 1000 கிராமப்புற சிறிய கோயில்கள், ₹10 கோடி செலவில் 1000 ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பணி, இதை தவிர்த்து, 1000 பெரிய கோயில்களில் திருப்பணி, நடப்பாண்டில் (2020-21ல்) ₹50 கோடி செலவில் 55 தொன்மை வாய்ந்த கோயில்கள், ₹10 கோடி செலவில் 1000 கிராமப்புற கோயில்கள், ₹10 கோடி செலவில் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதில், பெரிய கோயில்கள் மற்றும் நூற்றாண்டு பழமையான சிறிய கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள மாவட்ட, மாநில கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்படி 200 கோயில்கள் வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கோயில்களில் தற்போது தான் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் சிறிய கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், அந்த கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்ந சில தினங்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனாவால் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால், கடந்த 2019ல் திருப்பணி அறிவிக்கப்பட்ட கோயில்களில், பணிகளை முடித்து கும்பாபிஷேகம் ஏன் நடத்தவில்லை என்பது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது தொடர்பாக கமிஷனர் பிரபாகரிடம் தகவல் தெரிவிக்காததால் அவரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. இதனால், திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது தான் கோயில்களில் பல இடங்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது.

Tags : temples ,Assembly , Rule 110 in the Assembly, 4 thousand temples, restorations, status
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு