×

அக்கா வீட்டில் நகை திருடிய தம்பி கைது: 10 சவரன் பறிமுதல்

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அக்கா வீட்டில் 10 சவரன் திருடிய தம்பியை போலீசார் கைது செய்தனர் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சாகுல்அமீது (38) கார் டிரைவர். இவரது மனைவி நிஷா (32). கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி நிஷா வீட்டிற்கு, அவரது தம்பி முறையான ராயப்பேட்டை, அங்கமுத்து தெருவை சேர்ந்த தமிம் அன்சாரி (30) என்பவர் குடும்பத்துடன் வந்துள்ளார். பின்னர், இரு குடும்பத்தினரும் அதே பகுதியில் உள்ள உறவினரது குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர்,  நிகழ்ச்சி முடிந்து நிஷா வீட்டிற்கு வந்தார். அப்போது, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் நிஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமசாமி, எஸ்ஐ விஜயகுமார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், நிஷாவின் தம்பி தமீம் அன்சாரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  மேலும் விசாரணையில் தமீம் அன்சாரி, கடன் நெருக்கடியால் அவதிப்பட்டதால் அக்கா நிஷா வீட்டில் நகைகளை திருடி தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் விற்று பணம் பெற்று கடனை அடைத்தது தெரியவந்தது.  அன்சாரி கொடுத்த தகவலின் அடிப்படையில், 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் பிறகு, போலீசார் தமீம் அன்சாரியை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags : Brother ,sister ,jewelery ,house , Brother arrested for stealing jewelery from sister's house: 10 razors confiscated
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...