ஆவடி, :ஆவடி அடுத்த அரிக்கம்பேடு கிராமத்தில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் தங்கியிருப்பதாக சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த சில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பாட்சா (22) என தெரிந்தது. அவரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர், கடந்த 2015ம் ஆண்டு பங்களாதேசில் இருந்து ஆற்றுப்பாதை வழியாக மேற்குவங்கத்துக்கு வந்துள்ளார். பின்னர், ரயில் மூலம் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து, தங்கி கூலி வேலை செய்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் சென்னைக்கு வந்துள்ளார். ஆவடி அருகே அரிக்கம்பேடு பகுதியில் வட மாநிலத்தவர் என கூறி கட்டிட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் எதும் இல்லை என்பது தெரிந்தது. இவரை கைது செய்து, தீவிரவாத செயலில் ஈடுபட சென்னைக்கு வந்துள்ளாரா அல்லது பிழைப்பு தேடி வேறு வழியில்லாமல் கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.