×

சவுதி அரேபியா கரன்சியில் காஷ்மீரைத் தனித்துக் காட்டி இருந்த பிழை திருத்தம்

புதுடெல்லி, : சவுதி அரேபியா நாடானது, ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதை கொண்டாடும் வகையில் புதிய 20 ரியால் நோட்டுகளை வெளியிட்டு உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள உலக வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இல்லாமல் இந்தியா உள்ளது. இது மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‘சவுதி அரேபியாவின் நிதி ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டை பார்த்தோம். சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ கரன்சியில் இந்தியாவின் வெளிப்புற எல்லையை தவறாக சித்தரித்திருப்பது தொடர்பாக எங்கள் கவலையை டெல்லி மற்றும் ரியாத்தில் உள்ள சவுதி தூதரகம் வாயிலாக அந்த நாட்டு அரசுக்கு தெரிவித்து உள்ளோம்.

அத்துடன் இந்த தவறை உடனடியாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளோம். காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை மேலும் வலியுறுத்த விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து புதிய 20 ரியால் நோட்டில் உள்ள இந்திய எல்லை தொடர்பான வரைபடத்தில் திருத்தம் செய்யப்பட்டதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Kashmir ,Saudi Arabia ,
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...