×

திருமணம் முடிந்து திரும்பியபோது மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண்கள் உட்பட 7 பேர் பலி : ஆந்திராவில் இன்று பயங்கரம்

திருமலை:ஆந்திராவில் இன்று காலை மலைப்பாதையில் மினிவேன் கவிழ்ந்து திருமணத்திற்கு சென்று திரும்பிய பெண்கள் உட்பட 7 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கோகவரம் மண்டலத்தில் புகழ்பெற்ற தாட்டிகொண்டா மலை மீது கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கோக்கவரத்தை சேர்ந்த ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடந்தது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.   

இந்நிலையில் திருமணம் முடிந்து 24 பேரை ஏற்றிக்கொண்டு மினிவேன் மலையிலிருந்து கீழே இறங்கியது. பாதி வழியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் அடியில் சிக்கிகம்பலா பானு, சிம்ஹாத்ரி பிரசாத், எல்லாலட்சுமி, எல்லா திவ்யா லட்சுமி, சாகந்திமோகினி, பச்சகுரி நரசிம்மன், சோமரவுத்து கோபாலகிருஷ்ணா ஆகியோர், நசுங்கி பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த கோக்கவரம் போலீசார், அங்கு வந்து மினிவேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ராஜ மகேந்திரவரம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மினிவேனில் அடியில் சிக்கிய சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : women ,van crash ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது