சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணைய தளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் மே மாதம் 13ம் தேதி இ-சஞ்சீவனி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையை பயன்படுத்த esanjeevaniopd.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்து மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
தமிழ்நாடு அரசு உரிய பயிற்சிக்கு பின்னர் 865 அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தி இச்சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச எண்ணிக்கையில் மருத்துவர்களை ஈடுபடுத்தியும், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இச்சேவையை வழங்கியதிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த கட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை, 2,03,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.