×

அதிமுக ஆட்சி விரைவில் விவசாயிகளால் விரட்டி அடிக்கப்படும்: படத்திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் என படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக்  செயலாளருமான மு.காந்தி படத்திறப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. படத்தை திறந்து வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.இதையடுத்து, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒரத்தநாடு மு.காந்தி நம்மை விட்டுப் பிரிந்து இருந்தாலும், அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் ஏன், எப்போதும் நம் கண் முன் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும். இன்றைக்கு நடைபெறும் அதிமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கிறது.  விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசுக்கு கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

1000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என்று கைவிரிக்கிறார். அதைக் கொள்முதல் செய்யக் கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மூட்டைக்கு இவ்வளவு கொடுத்தால்தான் நெல்லை  கொள்முதல் செய்வோம் என்று சொல்லி விவசாயிகளைக் கதிகலங்க வைக்கிறார்கள். இதனால் உயர் நீதிமன்றமே, ‘விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்’ என்று கண்டனம் செய்தது. அப்போதும்  கூட இந்த எடப்பாடி அரசு திருந்தவில்லை. விவசாயிகள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்றுங்கள் பார்ப்போம். அதைச் செய்துவிட்டு, இப்படி மாட்டு வண்டியில் ஏறி விவசாயி என்று சொல்லுங்கள்.

அதை விடுத்து ஆட்சிக்காலம் முழுவதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டு, காவிரி டெல்டாவில் தூர் வாருவதிலும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து விட்டு நானும் விவசாயி நானும் விவசாயி என்று தயவு செய்து போலி வேடம்  போடாதீர்கள். உழைக்கும் வர்க்கமான இந்த நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.  மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி  ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். அரசு நடவடிக்கை எடுத்ததால் கொரோனா குறைந்து விட்டது என்கிறார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவிற்குப் பலியாகியிருப்பது பழனிசாமியின் மோசமான நிர்வாகத்தால் என்பதை மறந்து  விட்டு இப்படிப் பொய் சொல்கிறார். கொரோனா வந்தது உண்மை, அது தானாகவே குறைவது உண்மை.

தானாக குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. கொரோனாவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் கஷ்டப்பட்டார்கள். சிறு வியாபாரிகள் திண்டாடினார்கள். சிறு  குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்றுவரை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. பெரிய தொழிற்சாலைகளே இன்றைக்கு சகஜ நிலைமைக்கு இன்னும் வர இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு இன்னும் மீண்டும்  வேலை கிடைக்கவில்லை. கொரோனா காலத்திலும் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் போட்டவர் பழனிசாமி. கொரோனா காலத்திலும் மின் கட்டணத்தை ஈவு இரக்கமில்லாமல் வசூலித்து - அதைக் குறைக்க முடியாது என்று  நீதிமன்றத்தில் வாதிட்டவர் பழனிசாமி. கொரோனாவால் மக்களுக்கு நஷ்டம். ஆனால், பழனிசாமிக்கு லாபம்; மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லாபம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு லாபம்.

முகக்கவசம் கொள்முதலில் ஊழல். பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல். அதிவிரைவு கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்குவதில் ஊழல். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று நடத்தும் கொரோனா விளம்பரங்களில் ஊழல். இப்படி,  முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கொரோனா ஊழலில் கொள்ளை லாபம். மக்கள் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்று பழனிசாமியால் மறுக்க முடியுமா? நாளைக்கே கொரோனா  கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடும் துணிச்சல் பழனிசாமிக்கு உள்ளதா? அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி. தமிழக விவசாயிகளுக்கு  துரோகம் செய்த ஆட்சி. இந்த ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும்.

இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள். இருட்டில் தவிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான திமுகவின் ஆட்சியை பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை முத்தமிழறிஞர் கலைஞரின்  ஆட்சியை அமைப்போம். இவ்வாறு பேசினார்.


Tags : AIADMK ,MK Stalin ,opening ceremony ,speech , AIADMK regime to be ousted by farmers soon: MK Stalin's speech at the opening ceremony
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...