×

விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது! சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு

இஸ்லாமாபாத்: ‘இந்திய விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்து கொட்டியது’ என்று, அந்நாட்டு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர்  அயாஸ் சாதிக் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். கடந்தாண்டு பிப். 26ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை  பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகளின் மூன்று பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (பிப். 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற போது, பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது, பாகிஸ்தான் எப்-16 வகை  போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமான சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் பழுதடைந்ததால், அபிநந்தன் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். காற்றின் வேகம் காரணமாக அவரது பாராசூட்  பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது. பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் இருநாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

‘அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை  எச்சரித்ததால், மார்ச் 1ம் தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது, பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்ட அவசர ஆலோசனை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் ராணுவ  தளபதி ஜெனரல் ஒமர் ஜாதவ் பாஜ்வா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கவில்லை.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னரே அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்பதம் தெரிவித்தது. இந்நிலையில், அந்த கூட்டத்தில் என்ன நடந்தது, எவை எவை விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அக்கூட்டத்தில்  பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்கு மேலான நிலையில்,  இதுதொடர்பாக நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அயாஸ்  சாதிக் கூறியதாக பாகிஸ்தான் செய்தி ஊடகமான ‘டம்யா நியூஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: அந்த வீடியோவில் அயாஸ் சாதிக் பேசுகையில், ‘அபிநந்தன் விவகாரம் தொடர்பாக பிரதமர் இம்ரான்கான் பங்கேற்க மறுத்த  கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பங்கேற்றது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

கூட்டம் நடைபெறும் அறைக்குள் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா வந்தார். அப்போது அவரது கால்கள் நடுங்கின. அவரின் உடல் நடுங்கியது. அவருக்கு வியர்த்தது. அப்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை  (அபிநந்தன்) கடவுளின் செயலால் இப்போது விட்டுவிடுவோம். இல்லையேல் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும்’ என்றார். அதேபோல், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குவாஜா முகமது  ஆசிப் கூறுகையில், ‘இந்தியாவின் மீதான அச்சத்தின் காரணமாக இந்தியாவின் விமானியை பாகிஸ்தான் விடுவித்தது’ என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி இந்திய, பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில்,

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ராகுல் ஜி, நீங்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் விமானத் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினீர்கள் இல்லையா? மோடியின் பிரமிப்பைப் பாருங்கள்... அயாஸ்  சாதிக் பாகிஸ்தானில் பேசுவை பாருங்கள். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி நடுங்கிக் கொண்டிருந்தார். அவரது முகத்தில் வியர்த்து உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Bach ,release ,Abhinandan ,army commander ,upheaval ,incident , Bach at a debate on the release of pilot Abhinandan. The army commander's legs trembled ... sweating! One year after the incident, there was a sudden political upheaval
× RELATED தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத...