×

தமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!

சென்னை: தமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்த அறிக்கையில்: தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  7 கால்வாய்கள்  மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய்,  மருதூர் கீழக்கால் கால்வாய் , தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவைகளின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2021 மார்ச் 31ம் தேதி வரை 151  நாட்களுக்கு  14,351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு நல்நோக்கத்தில் பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Papanasam ,Chervalaru ,Palanisamy ,Manimuttaru ,Tamil Nadu , Papanasam, Chervalaru, Manimuttaru Dam, Chief Palanisamy, Order
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...