மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 181 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 186 பேர் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தார். உடனே அவசரமாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.
அதன்படி காலை 6.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 186 பேரும் உயிர் தப்பினர். பின்பு பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தை பழுதுபார்க்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே பயணிகளை மாற்று விமானத்தில் அந்தமான் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு நடக்கின்றன. தகுந்த நேரத்தில் விமானி தொழில்நுட்ப கோளாறை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.