×

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர்  அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம்  தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரும், பீகார் மாநில பொறுப்பாளருமான  ராம்ஜி கவுதம் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை முன்மொழிந்து, பகுஜன் சமாஜை சேர்ந்த 10 எம்எல்ஏ.க்கள் வேட்பு மனுவில்  கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில், வேட்பு மனுவில் தங்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதாக, பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 4 பேர்  நேற்று சர்ச்சையை கிளப்பினர்.

அவர்களுடன் மேலும் 2 எம்எல்ஏ.கள் இணைந்து தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளித்துள்ளனர். ஆனாலும், ராம்ஜியின் வேட்புமனு ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏ.க்களில் ஒருவர் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து இருப்பதாகவும் கூறி  உள்ளார். எனவே, அவர்கள் 6 பேரும் கட்சியிலிருந்து விலகப் போவதாகவும், சமாஜ்வாடியில் சேரப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. கட்சி  மேலிட தலைவர்கள் தங்களை மதிப்பதில்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ள போதிலும், கட்சி தலைவர் மாயாவதி மீது நேரடி  குற்றச்சாட்டுகள் சுமத்தவில்லை.  எம்எல்ஏ.க்கள் விலகல் விவகாரம், உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Mayawati ,UP ,Bahujan Samaj ,State elections , Mayawati in trouble in UP 6 MLAs decide to quit Bahujan Samaj: State elections turn around
× RELATED ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி...