செய்யூர்: மதுராந்தகம் அருகே பழைய வீட்டை இடிக்கும்போது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக ஒரு பழைய வீடு உள்ளது. இந்த வீடு பழடைந்து இருப்பதால், அதனை இடிக்க ரவிக்குமார் முடிவு செய்தார். இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் பழைய வீட்டை இடிக்கும் பணியை தொடங்கினார்.அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (32), ஆனந்தன் (35), கோதண்டம் (38) ஆகியோர் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டின் முன்பு போர்டிகள் பகுதியை இடிக்கும் பணி நடந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக சுவர் முழுவதும் அந்த மூவர் மீது இடிந்து விழுந்தது. இதில், இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3 பேரையும், அப்பகுதி மக்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜெயக்குமார் நேற்று அதிகாலை 1 மணியளவில், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனந்தன், கோதண்டம் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இறந்த ஜெயக்குமார் அப்பகுதியில், திமுக கிளை செயலாளராக இருந்தார். அவர், இறந்த தகவலை அறிந்ததும், எம்எல்ஏ புகழேந்தி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.