×

பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை இயற்கை உயிரி பூச்சிக் கொல்லி விநியோகம்: வேளாண் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இயற்கை உயிரிப் பூச்சிக் கொல்லி வழங்கப்படுகிறது. வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் பயிர்களின் அதிகமாக பாதிப்படைகிறது. ராசயன பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தால் ஏற்படும் பல்வேறு விதமான இடர்பாடுகளினால், அதன் உபயோகத்தை குறைத்து பூச்சிக்களை கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  

எனவே, பயிர்களை பாதுகாக்க இயற்கை உயிரிப் பூச்சிக் கொல்லியை பயன்படுத்தி பயிர் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். அதன்படி, தமிழக வேளாண் துறை மூலம் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இயற்கை உயிரிப் பூச்சிக் கொல்லி வழங்கப்படுகிறது. இதற்காக டிரைக்கோடெர்மா விரிடி கிலோ ஒன்றுக்கு ரூ.135, சூடோமோனாஸ் புளூரசன்ஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.179, டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ரூ.28, என்பிவி வைரஸ் ஒரு லிட்டர் ரூ.2000 என்ற தொகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் துறை வழங்குகிறது. மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான இயற்கை உயிரிப் பூச்சிக் கொல்லி விநியோகிக்கப்படுகிறது.

இதற்காக பவேரியா பேசியானா மற்றும் மெட்டாரைசியம் அனிசோபிலியே கிலோ ஒன்றுக்கு ரூ.135, டிரைக்கோகிரம்மா பிரட்டியோசம் சிசி ஒன்றுக்கு ரூ.28 எனவும் மக்காச்சோளம் பயிரிடும் அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. தென்னையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்த பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணம் விலையில்லாம் வழங்கப்படுகிறது. தென்னையில் கருந்தலைப் புழுவினை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி ஒரு எக்டேருக்கு ரூ.35 சேவை கட்டணமாக வழங்கப்படுகிறது. தென்னை நார் கழிவுகளை மக்க வைப்பதற்காக புளூரோட்டஸ் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Department of Agriculture , Measures to protect crops Natural bio-pesticide distribution: Department of Agriculture information
× RELATED மயிலாடி ஆலடிவிளையில் அட்மா திட்ட பயிற்சி