லண்டன்: கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’ என்று உலகின் 25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பெரும்பாலான மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். சீனாவின் வூகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி ஒட்டுமொத்த மக்களையும் முடக்கி போட்டுள்ளது. கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த தொற்றுநோய் பரவி வருவதால் இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகின் 25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் விபரம் வருமாறு: உலகின் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றுநோயை ஒரு அரசியல் சதித்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வைரஸ் என்கின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை யதார்த்தத்தை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன என்று நைஜீரியாவில் 60% பேர், கிரீஸ், தென்னாப்பிரிக்கா, போலந்து மற்றும் மெக்ஸிகோவில் 40%க்கும் அதிகமான மக்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் 38%, ஹங்கேரியில் 36%, இத்தாலியில் 30%, ஜெர்மனியில் 28% மக்கள் கொரோனாவால் பலர் இறப்பதில்லை என்று கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் ஒரு இயற்கையான தொற்றுநோய் அல்ல; சீனா அல்லது அமெரிக்கா இதனை உலகில் பரப்பியுள்ளதாக போலந்தில் ஐந்து பேரில் ஒருவர் கூறுகின்றனர். துருக்கி, எகிப்து, சவுதி அரேபியா மக்களும் குழப்பமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது என்று 13% அமெரிக்கர்கள் நம்புகின்றனர். அதேசமயம், 17% பேர் தங்கள் அரசாங்கமே கொரோனாவை பரப்பிவிட்டதாக கூறுகின்றனர். கொரோனா தொடர்பான போலி தகவல்கள் பல நாடுகளில் 5-ஜி இணைய தொழில்நுட்பம் வாயிலாக பரப்பப்படுகிறது என்று துருக்கி, எகிப்து, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் ஐந்து பேரில் ஒருவர் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 20%க்கும் அதிகமான மக்கள், கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் அரசாங்கம் உறுதியளிக்கவில்லை என்று கூறியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 57%, துருக்கியில் 48%, பிரான்சில் 38%, அமெரிக்காவில் 33%, ஜெர்மனியில் 31% மற்றும் ஸ்வீடனில் 26% மக்கள் அதே கருத்தை தெரிவித்து உள்ளனர் என்று கேம்பிரிட்ஜ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.