திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் ேபாக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்சில் தவித்த பெண் நோயாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சி அடிமாலி சிரயிலான் பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகமது. அவரது மனைவி பீவி (55). அவருக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தது. இந்த நிலையில் திடீரென அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் அடிமாலியில் இருந்து கோத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
சீயப்பாறை அருகே மூணுகலுங்கு பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக ஒரு மரத்தின் ராட்சத கிளை திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மீண்டும் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 15 நிமிடம் பீவி ஆம்புலன்சிலேயே அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிறிறு நேரத்தில் பீவி ஆம்புலன்சிலேயே பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு பீவியின் உடல் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கிளை விழுந்தபோது அந்த வழியாக 2 பைக்குகள் சென்றன. அதிர்ஷ்டவசமாக அவர்கள் 2 பேரும் உயிர் தப்பினர்.
இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கிடந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். நீண்ட நேர மீட்பு பணிக்கு பிறகு மீண்டும் அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.