பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன் குமரேசன் (26). இவர் கடந்த 3 வருடத்திற்கு முன்பு பெரம்பூர் சீனிவாசா ஆச்சாரி தெருவில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கலெக்ஷன் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அதிகப்படியான நேரத்தை செல்போனில் கேம்களை டவுன் லோட் செய்து விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, அவரது அறையில் தங்கியிருந்த நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
அப்போது இவரையும் சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறினர். அதற்கு அவர், ‘ஆன் லைன் ரம்மி மூலம் நிறைய பணத்தை இழந்து விட்டேன்’ என கூறி தொடர்ந்து தனது அறையிலேயே தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் குமரேசனின் செல்போன் ஒலித்து கொண்டே இருந்தது. அதனால் பக்கத்து அறையில் இருந்த நண்பர்களான ராஜசேகர், பாரதிராஜா ஆகியோர் வந்து பார்த்தனர். மின் விறிசியில் குமரேசன் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியஅடைந்தனர். இதுகுறித்து செம்பியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குமரேசனின் செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் குமரேசன் ஆன்லைன் ரம்மி மூலம் அதிகப்படியான பணத்தை இழந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரது நண்பர்கள் கூறுகையில், ‘மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் குமரேசன், வீட்டிற்கு சரிவர பணத்தை கொடுப்பதில்லை. அதே நேரத்தில் அவரது வீட்டில் இருந்தும் பணம் வாங்கி ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்’ என்பதும் தெரிய வந்தது. சில சமயங்களில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே நாள் முழுவதும் ரம்மி விளையாடி கொண்டிருப்பார் என்றும் இதை பலமுறை அவரது நண்பர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.