×

காவல்துறையில் கறுப்பு ஆடுகள் கை ஓங்கிவிட்டதாக குற்றச்சாட்டு: மதிப்பை கெடுத்த முதல்வர் மன்னிப்பு கேட்பாரா என ஸ்டாலின் கேள்வி

சென்னை: கறுப்பு ஆடுகளை காப்பாற்ற சலுகையும், பதவி உயர்வும் வழங்கி காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய குமரி மாவட்ட திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாகடர் சிவராம பெருமாள் விசாரணை என்ற பெயரில் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் மிரட்டி அவரது கண் எதிரிலேயே அவரது மனைவியை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தகவல்கள் இதயத்தை கலங்கடிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருவரும் உடல்நலக்குறைவால் இறந்ததாக எடப்பாடி பழனிசாமி பச்சை பொய்யை அறிக்கையாக வெளியிட்டதாகவும், காவலர்கள் செய்த கொலையை திட்டமிட்டு மறுத்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அறிக்கை விட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இருவரும் இரட்டை கொலையை போட்டிபோட்டு மறுத்ததால் காவல்துறையில் கறுப்பு ஆடுகளின் கை ஓங்கி, நேர்மையானவர்களுக்கு மரியாதை குறைந்த நிலை உருவாக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

கரன்சி அடிப்படையில் நியமனம், துறை சார்ந்த நடவடிக்கைக்கு உள்ளானவர்களுக்கு முக்கிய பதவி, மனித உரிமை மீறல்களை செய்ப்பவர்களுக்கு மகுடம், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் பதவி என்று பழனிசாமி செய்யும் செயல்கள் காவல்துறைக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி வருவதாக அவர் சாடியுள்ளார். சாத்தான்குளம் கொலைகளை மறைத்தற்காகவும், காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காவும், மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? என்றும் அவர் வினவி உள்ளார். 


Tags : Stalin ,Chief Minister ,police force , Stalin accuses Chief Minister of apologizing for defaming black goats
× RELATED வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும்...