×

10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு..!!

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது குறித்த அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், 39,000 பேர் 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய நிலையில் சுமார் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து, பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதன்பிறகு, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இன்று தனித்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 22 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், 12ம் வகுப்பு தனித்தேர்வில் 40 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 12 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Tags : Parents , 10th class, individual examination, pass
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்