×

காவேரிபுரமே காவேரிப்பாக்கமானது: பாவ விமோசனம் அளிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்

தொண்டை மண்டலத்தில் முக்கிய தலமான காஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சிவன், விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ள திருவேணி சதூர்வேதமங்கலம் என்று அழைக்கப்பட்டது காவேரிப்பாக்கம். இங்குள்ள சைவபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த கொண்டாபுரத்தில் வான்புகழ் கொண்ட திருவள்ளுவருடைய மனைவி வாசுகி பிறந்த ஊராகும்.

அவருக்கு மற்றொரு பெயர் காவேரி. அவரது தந்தை செல்வந்தர். காவேரிக்கு ஒரு பகுதி சீதனமாக வழங்கியுள்ளார். இதனால் அப்பகுதி காவேரிபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் காவேரிபுரம் என்ற பெயர் மருவி காவேரிப்பாக்கம் என்று மாறியதாக கூறப்படுகிறது.

இப்பகுதி பலநூறு ஆண்டுகளாக ஆன்மீகத்திலும், விவசாயத்திலும், கொடிகட்டி பறந்த ஊராக விளங்கியுள்ளது. ராஜராஜ சோழன் தீர்த்த யாத்திரை சென்றபோது, இவ்வூரின் பெருமைகளை பற்றி மிகவும் அழகாக குறிப்பிட்டுள்ளார். இங்கு சைவ, சமய, பெரியோர்களுக்கும், புத்த துறவிகளுக்கும் வாத பிரதிவாதங்கள் நடைப்பெற்ற ஊராகும்.

மேலும் 108 வைணவ தலங்களில் 107 வதாக போற்றப்படும் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆவுடையார் (சிவலிங்கம்) மீது நின்ற கோலத்தில் பெருமாள் புண்டரீக மகரிஷிக்கு காட்சி அளித்த திருத்தலம். இத்திருத்தலத்திற்கு சென்று வழிபட்டால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திசைமுகச்சேரியில் உள்ள பரமபதநாதர் கோயில் 108வது அபிமான ஸ்தலமாக போற்றப்படுகிறது.
இங்குள்ள பெருமாள் இடது கையால் ஊன்றி எழுவது போல் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  இக்கோயிலின் அருகே நரசிம்மர் இரண்யனை வதம் செய்து கோபம் தணிய இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டதால் நரசிம்ம ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவன் கோயில் கோபுரம் முழுவதும் பெருமாளின் தச அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தவமிருந்து பக்தர்களுக்கு அருளாசிகளை வாரி வழங்கிய சேஷாத்ரி சுவாமிகள் இங்குள்ள முத்தீஸ்வரரை வழிபாடு செய்து சித்து விளையாட்டுகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த முத்தீஸ்வரரை வழிபாடு செய்தால் பிறவி பயனை அடையலாம் என்பது சான்றோர்கள் வாக்காக உள்ளது.

இந்த உலகம் பஞ்ச பூதங்களுக்கு ஆட்பட்டது என்றும், அவற்றால் நாம் பஞ்சசக்திகளாக வழி நடத்தப்படுகிறோம். இங்கே பஞ்ச லிங்கேஸ்வரர் கோயிலில் 5 சக்திகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. இவை தரிசிக்க வேண்டிய 3வது ஸ்தலம்.ராமாயணத்தின் முக்கிய பாத்திரமான வாலி இங்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் இக்கோயில் வாலிஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் 4வது தலமாகும்.
திருக்கரைபுரம் என்று அழைக்கக்கூடிய திருப்பாற்கடலில் 600ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் ரங்கநாதர் பெருமாள் கோயிலும் வைணவ பக்தர்கள் அதிகம் போற்றக்கூடியதாகும். அதேபோல் 1500ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கரைபுரீஸ்வரர் கோயிலில், சைவ சமயத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதான கோயிலாகும். ராஜராஜசோழன் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து சென்றதாக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை தரிசிக்க வேண்டிய 5வது தலமாகும்.

இங்குள்ள சிவாலயங்களில் பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி, ஆகிய நாட்களில் ஒருசேர தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி பிறவி பயனை அடையலாம். இப்படி காவேரிப்பாக்கம் ஆன்மீகத்தை ஒருங்கே கொண்ட ஊராக விளங்கி வருகிறது.  காவேரிப்பாக்கத்தில் உள்ள கொங்கணீஸ்வரர், முத்தீஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர், வாலீஸ்வரர், திருக்கரைபுரீஸ்வரர் ஆகிய 5 கோயில்களுக்கு சென்று வழிபட்டால் கர்மவினைகள் நீங்கி, நன்மை பெறுவர்  என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தமிழகத்தில் 3வது பெரிய ஏரியாக காவேரிப்பாக்கம் ஏரி உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரியாகும். இதன் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர். இந்த ஏரி ஒருமுறை நிரம்பினால் 3 போகம் அறுவடை செய்யலாம். நரிமதகு, சிங்கமுத்து, மூலமதகு, உள்ளிட்ட 10 மதகுகள் மூலம் விவசாயத்திற்கு நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகின்றன.
இப்படி சிறப்பு வாய்ந்த காவேரிப்பாக்கம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. இவை 1950-ல் 2ம் நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 14,583 பேரும். இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 73 சதவீதமாக உள்ளது.இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் அமையப்பெற்றுள்ளது. இங்கு முக்கிய தொழிலாக விவசாயம் சார்ந்தே உள்ளது.காவேரிப்பாக்கம் பேரூராட்சியை சுற்றி அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கட்டளை, அய்யம்பேட்டைசேரி, உப்பரந்தாங்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராம மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பஜார் வீதி, பஸ் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரப்பாக காணப்படும்.

இதன் காரணமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயல்கின்றனர். அப்போது அதிக வேகத்தில் வரும் கனரக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். இந்த சாலை விபத்துக்களில் வாரத்தில் ஒரு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள காவேரிப்பாக்கம், ராமாபுரம், கடப்பேரி, சுமைதாங்கி, பாகவெளிகூட்டுரோடு, துரைபெரும்பாக்கம் கூட்டு ரோடு, ஓச்சேரி, அவளூர், பெரும்புலிபாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகம் நேரிடுகின்றன.

இவ்வாறு சாலை விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்டு காஞ்சிபுரம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் போகும் வழியிலேயே இறந்து விடும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. எனவே உயிர் இழப்புகளை தடுக்க காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றன. அதோடு விபத்தில் சிக்குபவர்களை மீட்க காவேரிப்பாக்கம் காவல் நிலையம் எதிரே ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடிக்கவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், ஆந்திரா, ஒசூர், கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளுக்கு வணிகர்கள், தொழிலாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், என அனைத்து தரப்பினரும் நாள்தோறும் சென்று வருகின்றனர்.
ஆனால் வேலூர் மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் காவேரிப்பாக்கத்தில் இருந்து பயணிக்கும்போது போதிய இடவசதி இல்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவேரிப்பாக்கத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. அதில் குறிப்பிட்ட 2 தனிநபர்கள் மட்டும் அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்கொள்முதல் செய்வதால், விரக்தியடைந்த விவசாயிகள் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை அம்மூருக்கு கொண்டு சென்று நெல்மூட்டைகளை விற்பனை செய்கின்றனர். இதனால் காவேரிப்பாக்கம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Prasanna Venkatesa Perumal ,Kaveripakkam , Prasanna Venkatesh Perumal
× RELATED கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய...