×

பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு எதிர்ப்பு!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கும் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் பங்கஜ் ராகவ், வனஜாக்‌ஷம்மா, பிரசாந்த் லாவனியா மற்றும் சண்முகம் சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

யார் அந்த சண்முகம் சுப்பையா

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்மணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். அதாவது கணவனை இழந்த 52 வயதான அப்பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் உள்ளார். இது குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுக்க இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவை எம்.பி. ரவிக்குமார்

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மக்களவை எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணை துன்புறுத்திய குற்றச் சாட்டில் வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

அதேபோல் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ ? என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

 திமுக எம்.எல்.ஏ. பி. தியாகராஜன்

இதேபோல் திமுக எம்.எல்.ஏ. பி. தியாகராஜனும் தமது ட்விட்டர் பக்கத்தில் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 3 எம்.பிக்கள் குழுவை அறிவிக்கவில்லை; ஆனால் சிறுநீர் சர்ச்சையில் சிக்கிய டாக்ட்ர் சண்முகம் சுப்பையாவை நியமித்திருக்கிறார்கள். இது பாஜகவின் ஜனநாயகவிரோத செயல் என கூறியுள்ளார்.

Tags : Shanmugam Subbaiah ,Madurai AIIMS Hospital , Madurai, AIIMS Hospital, Member, Urine Controversy, Shanmugam Subbaiah
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...