மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரகுன்றம் தொகுதியில் இருக்கும் தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் கட்டுமான பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே மாதம் தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, கட்டுமான பணி மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார். அதே போல, எம்.ஜி.ஆர் மருத்துவமனையின் துணை வேந்தராக இருக்கும் டாக்டர் சுதா சேஷயன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் பங்கஜ் ராகவ், வனஜாக்ஷம்மா, பிரசாந்த் லாவனியா மற்றும் சண்முகம் சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியவர்தான் சென்னை மருத்துவர் சண்முகம் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.