சென்னை: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 10 அரசு கலை கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தபடவில்லை. இதனால் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, அரியலூர், கோயம்பத்தூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண்கள் கல்லூரி உட்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இக்கல்லூரிகளில் பாடம் நடத்த மொத்தம் 170 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிகளிலும் தலா 5 பட்டபடிப்புகளுக்கான 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தததால் சுமார் 75% முதல் 95% இடங்கள் நிரம்பின. ஆனால் இதுவரை போதுமான ஆசிரியர்களை நியமிக்காத காரணத்தால் இக்கல்லூரிகளில் படிக்கும் 2 ஆயிரம் மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. தற்போது வரை ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மற்ற அரசு கல்லூரிகளில் ஒரு மாதமாத்திற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் இக்கல்லூரிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவே இல்லை. இந்த நிலையில் பல்கலைகழகங்கள் வரும் டிசம்பர் மாதம், முதல் பருவத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன. சில பல்கலைகழகங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவேற்றுமாறு கல்லூரிகளிடம் கேட்டுவருகின்றன. பாடமே நடத்தாமல் எவ்வாறு இன்டர்நல் தேர்வு நடத்தி அகமதிப்பீடு வழங்க முடியும் என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்களோ, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதல் பருவத்தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்ற அச்சத்தில் உள்ளனர்.