ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காங்கயம் ரோடு ரோஜா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (65). இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23ம் தேதி பிரகாஷ் அங்கிருந்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். சிகிச்சைக்காக 2 லட்சத்து 25 ஆயிரம் ஏற்கனவே செலுத்தி உள்ளனர். மீதமுள்ள ₹2 லட்சத்து 60 ஆயிரம் கட்டணத்தை செலுத்தினால்தான் உடலை ஒப்படைக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.
பிரகாஷின் மகன் விஸ்வநாதன் மாற்றுத்திறனாளி என்பதாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளதாலும் மீதமுள்ள பணத்தை செலுத்த முடியாது என்று விஸ்வநாதன் உள்பட உறவினர்கள் திடீரென மருத்துவமனையை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீசார் அங்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீதமுள்ள பணத்தை கட்டத்தேவை இல்லை என்று கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று காலை பிரகாஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.