சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையின் படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்கி இருக்கின்றனர். ஒரு மீனவர் மண்டை உடைந்தது. தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கை தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது. இழப்பு ஈடு எதுவும் பெற்று தந்ததும் இல்லை. இந்த பிரச்னைக்கு அடிப்படை காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகிற குரலை, இந்திய அரசு கண்டுகொள்வது இல்லை. தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.